பாலிவுட் திரையுலகின் தற்போதைய சென்சேஷன் ரன்வீர் சிங் (Ranveer Singh) நடிப்பில், இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகத் தயாராக இருந்தது. நாளை (மார்ச் 19) அதிகாரப்பூர்வமாகப் படம் வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை சிறப்பு ப்ரீமியர் காட்சிகளுக்கு (Paid Previews) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக, இந்த இரு மொழிகளிலும் இன்று நடைபெறவிருந்த (18-மார்ச் ) ப்ரீமியர் காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முக்கியக் காரணமாகத் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் கன்டென்ட் டெலிவரி (Content Delivery) தாமதத்தைச் சினிமா வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. படத்தின் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளைத் திரையரங்குகளுக்கு அனுப்பும் பணியில் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால், இன்று இந்த மொழிகளில் படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்குப் பணத்தைத் திரும்பத் தரும் பணிகளில் திரையரங்கு உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், படத்தின் ஒரிஜினல் ஹிந்தி பதிப்பு இன்று மாலை திட்டமிட்டபடி சில திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்தி பதிப்பைப் பொறுத்தவரை, இன்று மாலை 5:30 மணி முதல் காட்சிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டிசிபி (DCP) எனப்படும் டிஜிட்டல் ஃபைல்கள் திரையரங்குகளுக்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட தாமதத்தால், பல இடங்களில் மாலைக் காட்சிகளும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. மதியத்திற்கு மேல் தான் கன்டென்ட் லோடிங் (Content Loading) பணிகள் தொடங்கும் என்பதால், ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்பு ஒருமுறை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் நீளம் (Runtime) தற்போது திரையுலகில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீப காலங்களில் வெளியான மிக நீளமான படங்களில் ஒன்றாக ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ இணைந்துள்ளது. படத்தின் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடங்கள் நீளமும், இரண்டாம் பாதி 2 மணிநேரம் 13 நிமிடங்கள் நீளமும் கொண்டுள்ளது. மொத்தமாக இந்தப் படம் 3 மணிநேரம் 53 நிமிடங்கள் (233 நிமிடங்கள்) ஓடக்கூடியது. இந்தியத் திரையுலகில் ‘லகான்’ மற்றும் ‘எல்ஓசி கார்கில்’ போன்ற படங்களுக்கு இணையாக இந்த ரன்டைம் அமைந்துள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
படத்திற்குத் தணிக்கைக் குழு ‘ஏ’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. அதிகப்படியான வன்முறை மற்றும் ஆக்க்ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2025-இல் வெளியான இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ரன்வீர் சிங்கின் மிரட்டலான ஆக்க்ஷன் மற்றும் ஆர். மாதவன் (R. Madhavan), சஞ்சய் தத் போன்ற நட்சத்திரங்களின் பங்களிப்பு படத்திற்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
நாளை முதல் தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிகளிலும் படம் வழக்கம்போலத் திரையிடப்படும் என்று படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர். இன்றைய தொழில்நுட்பக் குளறுபடிகளைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 4 மணிநேரம் ஓடக்கூடிய இந்தப் படம், ரசிகர்களைத் திரையரங்குகளில் கட்டிப்போடுமா? அல்லது நீளம் சோர்வைத் தருமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.













