தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு. இவர் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடியின் தாயார் மறைவுக்காக சேலத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை மிக மோசமடைந்து கொண்டே வந்தது. நாளடைவில் நுரையீரல் 90 சதவீதம் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும் அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.15மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு முன் சென்னையிலேயே முதல்வர் எடப்பாடி, மூத்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.
இவர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் நின்று வெற்றிபெற்றவராவார்.













