தமிழ் திரையுலகில் நடிகர் விஷால் (Vishal) மற்றும் இயக்குநர் மிஸ்கின் (Mysskin) கூட்டணி எப்போதுமே விவாதப் பொருளாக இருந்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மிஸ்கின் குறித்து நடிகர் விஷால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், வெளிப்படையாகவும் பேசியுள்ளார். கோபத்தின் வெளிப்பாடாக இதைப் பார்க்க வேண்டாம் என்றும், தனக்கு அவர் மீது கோபத்தை விட ஒரு வருத்தம் மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் எதுவும் நிரந்தரமானது கிடையாது என்று சுட்டிக்காட்டியுள்ள விஷால், எதிர்காலத்தில் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு நடிகராக நடிக்க அழைத்தால் சென்று நடிப்பேன் என்றும், ஆனால் ஒரு தயாரிப்பாளராக தன் வாழ்நாளில் இனி அவருடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ‘துப்பறிவாளன் 2’ (Thupparivalan 2) படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் பிளாட்பாரத்தில் தான் காத்திருந்த அந்தத் தருணத்தை மரணம் வரை மறக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இளம் வயதில் தன்னிடம் இருந்த தைரியத்தினால் அந்தச் சூழ்நிலையைச் சமாளித்ததாகவும், அதே சூழ்நிலையில் 60-65 வயதுடைய தயாரிப்பாளர் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
திரையுலகில் கருத்து வேறுபாடுகள் மற்றும் உராய்வுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், சில விஷயங்களை எங்களால் எளிதில் மறந்துவிட முடியாது என்று நடிகர் விஷால் தனது கடந்தகால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.













