இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த இயக்குநர் கணேஷ் கே பாபு (Ganesh K Babu), தற்போது நடிகர் ரவி மோகனுடன் இணைந்து ‘கராத்தே பாபு’ (Karathey Babu) திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், படம் குறித்த பல சுவாரஸ்யமான பின்னணித் தகவல்களை இயக்குநர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “‘கராத்தே பாபு’ கதை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் sir-ஐ மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டது. குறிப்பாக, அவர் சட்டமன்றத்தில் ‘மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…’ என்று பேசும் காட்சியை கற்பனை செய்துதான் அந்தச் பிரேமை உருவாக்கினேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “‘டாடா’ படத்திற்குப் பிறகு ரவி மோகன் sir-க்கு ஒரு ரொமான்டிக் காமெடி கதையைத்தான் நான் கூறினேன். ஆனால் அவர் வேறு ஒரு வித்தியாசமான கதையைக் கேட்டார். உடனே நான் அவரிடம் ‘கராத்தே பாபு’ கதையைச் சொன்னேன். அவருக்கு உடனடியாகக் கருத்து பிடித்துப்போக, அவருக்காகவே அப்படத்தின் கதையை முழுமையாக மாற்றி அமைத்தேன்,” என்றார்.
ரவி மோகனின் இளமைக் காலத் தோற்றத்தை மனதில் வைத்தே இப்படத்தின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்குப் பிறகு ரவி மோகன் அனைவரின் நாயகனாக மாறுவார் என்றும், அவரது சினிமா வாழ்க்கையில் இதுவரை பார்க்காத ஒரு மிரட்டலான நடிப்பை இதில் பார்க்க முடியும் என்றும் கணேஷ் கே பாபு நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.













