ஐபிஎல் 2026 தொடரின் தற்போதைய ஹாட் டாப்பிக் என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் வெறும் 14 வயதில் அறிமுகமாகி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 38 பந்துகளில் சதம் விளாசி ஒட்டுமொத்த உலகையுமே அதிர வைத்தவர் இந்த பீகார் சிங்கம். இப்போது 2026 அண்டர்-19 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஃபைனலில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுத்துவிட்டு, செம ஃபார்மில் ஐபிஎல் களத்திற்குத் திரும்பியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வைபவ், தனது பேட்டிங் ஸ்டைல் மற்றும் இன்ஸ்பிரேஷன் குறித்துப் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். “நான் வளர்ந்த காலத்திலிருந்தே பிரையன் லாரா மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரையும் பார்த்து தான் வளர்ந்தேன். அவர்கள் இருவரும் களத்தில் இருந்தால் எதிரணிக்கு ஜெயிக்க வாய்ப்பே இருக்காது. தனி ஆளாக நின்று மேட்ச்சை முடித்துக்கொடுக்கும் அந்த ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நானும் அவர்களைப் போலவே விளையாட விரும்புகிறேன்” என்று மாஸாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “பீகார் உள்ளூர் போட்டிகளில் நான் விளையாடிய போதிலிருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் டீம் என்னைக் கண்காணித்து வந்தது. வினூ மன்கட் டிராபி மற்றும் ரஞ்சி போட்டிகளில் எனது ஆட்டத்தைப் பார்த்து தான் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். கடந்த சீசனில் நான் சதம் அடித்தது ஒரு தொடக்கம் தான். இந்த 2026 சீசனில் எனது ஒரே இலக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பது தான். நாம் கோப்பையை வென்றால் நமது தனிப்பட்ட பெர்ஃபார்மன்ஸ் தானாகவே பேசப்படும்” என்று மெச்சூரிட்டியுடன் பேசியுள்ளார்.
பவர்பிளே ஓவர்களில் பவுலர்களைப் பந்தாடும் வைபவ், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிக முக்கியமான துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறார். 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும் போது தொடக்கத்திலேயே அதிரடி காட்டி எதிரணியின் திட்டத்தைத் தவிடுபொடியாக்குவது தான் தனது வேலை என்றும் அவர் கூறியுள்ளார். லாரா மற்றும் யுவராஜ் சிங்கின் கலவையாகத் திகழும் இந்த வண்டர் கிட், இந்த முறை ஐபிஎல் கோப்பையை ஜெய்ப்பூருக்குக் கொண்டு வருவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













