தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரி மற்றும் குளங்கள் தூர் வாருவதற்கு 500 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது.
தென்மேற்கு பருவமழை முடிவு பெற உள்ளது. தமிழகத்தில் அதிக பலன் தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விவசாயத்திற்கு பயன் தரக்கூடிய ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி தயார் நிலைப்படுத்துவதுடன் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
இதில் முதல் கட்டமாக ஐந்தாயிரம் சிறுபாசன ஏரி குளங்கள் தூர்வாரப்படுகின்றன. அதற்காக தமிழக அரசு 500 கோடி நிதியாக ஒதுக்கி இருக்கின்றது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “நீர் நிலைகளை தூர்வாரி மழை நீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்து வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22,051 நீர் பாசன ஏரிகளில் முதற்கட்டமாக 5000 சிறுபாசான ஏரிகளை புறனமைப்பதற்காக கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் சிறுபாசான ஏரிகளை இயந்திரங்களை பயன்படுத்தி தூர்வாறுதல், ஆழப்படுத்துதல், உபரி நீர் போக்கு, மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் பழுது பார்த்தல், புனரமைத்தல் போன்ற அனைத்து செயல்களையும் செயல்படுத்துவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதன் மூலம் நீர் நிலைகளின் கொள்த்திறன் அதிகரிக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாயம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதி மூலமாக பணிகள் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













