நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அடையாளம் தெரியாத நபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மதுரை தள்ளாக்குளம் பகுதியில் இந்த கொலை வெறிச்செயல் நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல்ராஜன் இல்லத்திற்கு மிக அருகேயும், காவல் நிலையத்திற்கு அருகேயும் உள்ள சாலையில் வைத்து இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது மதுரை வாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலசுப்பிரமணியத்தின் கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். கொலைக் குற்றாவாளிகளின் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பாலசுப்ரமணியத்தின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களையும், ஆறுதலையும் சீமான் தெரிவித்துள்ளார்.













