ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தோடா பகுதியில் நடந்த சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிட்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் இது குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் நடந்துள்ள மற்றொரு தாக்குதலால் நமது ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலியையும், அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவது மிகுந்த வருத்தமும், கவலை அளிக்கிறது என்றுள்ளார். ஜம்மு – காஷ்மீரின் மோசமான நிலையை இந்த தாக்குதல்கள் வெளிப்படுத்துவதாக தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அதோடு நமது ராணுவ வீரர்களும், அவர்களின் குடும்பங்களும் பாரதிய ஜனதாவின் தவறான கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும், மீண்டும் நடக்கும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். நாட்டுக்கும், ராணுவ வீரகளுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனின் கோரிக்கையாக உள்ளது.
இந்த துயரமான நேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது என்றுள்ளார். ஜம்மு – காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய அரசின் மீதான தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார் தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக ராகுல் காந்தி.













