தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் முதலில் தனது வீட்டை விட்டு வெளியே வரட்டும் என்றும், குறிப்பாக திரிஷாவை விட்டு வெளியே வந்தால்தான் உருப்படியாக ஏதாவது நடக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒரு முன்னணி நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சக நடிகையை தொடர்புபடுத்திப் பேசியிருப்பது திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நயினார் நாகேந்திரன் தனது பேச்சில் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், குடும்ப உறவுகளைச் சரியாகப் பேணத் தெரியாதவர் மாநிலத்தை எப்படி வழிநடத்துவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். “கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானா?” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி விஜய்யை அவர் கடுமையாகச் சாடினார். மேலும், விஜயகாந்த் காலத்திலேயே கூட்டங்கள் வாக்குகளாக மாறவில்லை என்று குறிப்பிட்ட அவர், விஜய்யால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று எள்ளி நகையாடினார்.
CRASS COMMENTS BY #BJP TAMILNADU CHIEF NAINAR NAGENDRAN ON #TVK CHIEF @TVKVijayHQ
CHEAP COMMENTS INSINUATING AND TARGETING ACTOR TRISHA WHO’S ACTED WITH THALAPATHY VIJAY IN MULTIPLE FILMS @TVKPartyHQ #TNPolitics pic.twitter.com/pmYpNFrCJ8
— Apoorva Jayachandran (@Jay_Apoorva18) February 13, 2026
இந்த விவகாரத்தில் நடிகை திரிஷாவின் பெயரை இழுத்தது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இதேபோன்று திரிஷாவின் பெயரை வைத்து கிண்டல் செய்திருந்த நிலையில், இப்போது பாஜக தலைவரும் அதே பாணியைப் பின்பற்றுவது பெண் கலைஞர்களை இழிவுபடுத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். குஷ்பு போன்ற பாஜகவின் பெண் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அரசியல் நாகரிகம் இன்றி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.