தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் திரைப்படம் ‘மூன்றாம் பிறை’. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1982-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், இன்று வரை காதலையும், பிரிவையும் சொல்லும் ஒரு உன்னதமான படைப்பாகப் போற்றப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி 44 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக டிஜிட்டல் தளத்தில் (OTT) வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் தரத்தில் மலரும் பழைய நினைவுகள்:
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘மூன்றாம் பிறை’, வரும் மே 1, 2026 முதல் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) தளத்தில் வெளியாகிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் (Digitally Remastered), பழைய ரசிகர்கள் மட்டுமின்றி புதிய தலைமுறை ரசிகர்களும் இந்தப் படைப்பைத் தெளிவான காட்சிகளுடன் ரசிக்க முடியும்.

கமல் – ஸ்ரீதேவியின் மிரட்டலான நடிப்பு:
பின்னோக்கு மறதி நோயால் (Retrograde Amnesia) பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணையும், அவளைக் காப்பாற்றிப் பராமரிக்கும் ஒரு பள்ளி ஆசிரியரையும் சுற்றியே இந்தப் படம் நகரும். ‘சீனு’ கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், ‘விஜி’ கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும் தங்கள் வாழ்நாள் சாதனையாகக் கருதத்தக்க நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருப்பார்கள். குறிப்பாகப் படத்தின் இறுதிக்காட்சியில் கமல்ஹாசனின் நடிப்பு, இன்று வரை சினிமா மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருந்து வருகிறது. இந்தப் படத்திற்காகக் கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் இசை மற்றும் பாலுமகேந்திராவின் மேஜிக்:
இளையராஜாவின் இசையில் உருவான “கண்ணே கலைமானே”, “பொன்மேனி உருகுதே” போன்ற பாடல்கள் இன்றும் எவர்கிரீன் ரகங்கள். இதில், “கண்ணே கலைமானே” கவிஞர் கண்ணதாசன் தனது மரணத்திற்கு முன் எழுதிய கடைசிப் பாடல் இது என்பது மற்றொரு சிறப்பம்சம். பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவும், இயக்கமும் இந்தப் படத்தை ஒரு கவிதை போல மாற்றியிருக்கும். 1983-ல் ஹிந்தியில் ‘சத்மா’ (Sadma) என மறுபதிப்பு செய்யப்பட்ட போதும் அதே வரவேற்பைப் பெற்றது. இப்போது 44 ஆண்டுகளுக்குப் பின் டிஜிட்டல் வடிவில் வரப்போகும் ‘மூன்றாம் பிறை’ நிச்சயம் மீண்டும் ஒருமுறை சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













