திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு அவரது காதலன் யுட்யூப் பார்த்து பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் 19 வயது பெண் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு தந்தை இல்லை. தாயும் ஒரு தம்பியும், ஒரு தங்கையும் மட்டுமே. இவர் தனது உறவுக்கார பையனான கேஸ் டெலிவரி செய்யும் சௌந்தர் என்பவரைக் காதலித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் மூலமாக கர்ப்பமாகியுள்ளார்.
ஆனாலும் அதன் பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளார் சௌந்தர். இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 8 மாத கர்ப்பமாக இருக்கும் அந்த பெண்ணுக்குக் கல்லூரியில் வைத்து திடீரென வலி ஏற்பட சௌந்தருக்குத் தகவல் சொல்லியுள்ளார்.
உடனே அந்த பெண்ணைக் காட்டுக்கு அழைத்து சென்ற சௌந்தர், யுட்யூப்பில் பிரசவ வீடியோக்களைப் பார்த்து அதில் உள்ளபடி காதலிக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்துள்ளார். அப்போது குழந்தையின் கை மட்டும் வெளியே வர அதைப் பிடித்து இழுத்துள்ளார். இதில் குழந்தையின் கை துண்டாக வெளியே வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலைமையை உணர்ந்த சௌந்தர் 108 க்கு அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே மருத்துவர்கள் விரைந்து அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் ஆண் குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்ணுக்கு தீவிர சிகிச்சையும் அளித்து வருகின்றனர். இதையடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் சௌந்தரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







