கடந்த வருடம் இதே நேரத்தில் பரவிய கொரோனாவால் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டது போல கோவில்களும் அடைக்கப்பட்டது. நீண்ட நாட்கள் அடைக்கப்பட்ட கோவில்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்துதான் மெல்ல மெல்ல திறக்கப்பட்டன. பெரிய பெரிய திருவிழாக்கள் கூட நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருவதாக கூறப்படும் நிலையில் அறநிலையத்துறை கமிஷனர் (பொறுப்பு) ரமண சரஸ்வதி அனைத்து கோயில் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கோவிட் 19 நோய் பரவி வருவதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் போதும், விழாக்கள் நடைபெறும் போதும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணித்து உறுதிப்படுத்தவும், இது தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடத்தில் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பிக்கள், நகர காவல் ஆணையர், உள்ளாட்சி நிர்வாகங்கள், உள்ளூர் சுகாதாரத்துறை ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆலோசனை பெற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கியும் இந்த விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.







