வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் இந்திய விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு தினம் சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அந்த தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக செய்து காட்டினார்கள். அன்றைய தினத்தில் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு ஏராளமான மக்கள் மெரினா கடற்கரையில் கூடியிருந்தார்கள்.
இந்நிலையில் இந்திய விமான படையின் 92வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தாம்பரம் விமானப்படைத்தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடும் வெயில் காரணமாக விமானப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஸ்ட்ரெச்சருடன் உடனடியாக அங்கு வந்த சக வீரர்கள் மயங்கி விழுந்த விமானப்படை வீரரை தூக்கி முதலுதவி செய்வதற்கு அழைத்து சென்றார்கள். மயங்கி விழுந்தவரின் இடத்தில் மற்றொரு வீரர் வந்து நின்றதால் அணிவகுப்பு எந்தவித தடையும் இல்லாமல் நடைபெற்று முடிந்தது.













