சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் குடியரசு தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதல்வர் மு க ஸ்டாலின் ஊக்குவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த நிகழ்ச்சி கூடுதல் மகிழ்ச்சி அடைகின்றது. காவல்துறையினர் பதக்கம் வாங்கியது தானே வாங்கியது போல் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். பதக்கம் வென்ற காவலர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தலை வணங்கத்தக்கது.
அமைதியான மாநிலத்தில் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும். இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது. தமிழகம் பெருமைமிகு மாநிலமாக திகழ காவல்துறையின் பங்கு மிக முக்கியமானது .சட்ட ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்க முடியும்.
காவல்துறை நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. காவல்துறையை மேலும் நவீனப்படுத்தி வருகின்றோம். காவல்துறையை நவீனமாகியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. காவல்துறையில் மகளிருக்கு வாய்ப்பு அளித்தது கலைஞர் கருணாநிதி.
மேலும் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும். அவரின் கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களில் 3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் செய்யப்படும்” என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.







