தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுரியம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.













