டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். பின்னர் டெல்லியின் முதல்வராக கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து முதன் முறையாக டெல்லி சட்டசபையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார் .
அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் என்னையும் மனிஷ்சோடியாவையும் இங்கு பார்த்து எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் வருத்தப்படுவார்கள். பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர். ஆனால் அவர் கடவுள் ஒன்றும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் கடவுள் அல்லது ஒரு வித ஆற்றல் நமக்கு உதவி செய்யும். எனக்கு பதவி ஆசை இல்லை. 3 முறை பதவியை ராஜினாமா செய்திருக்கின்றேன்.
உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு பாஜக தலைவரை சந்தித்தேன். என்னை சிறைக்கு அனுப்புவதால் உங்களுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா என்று நான் கேட்டேன். அதற்கு நாங்கள் முழு டெல்லி அரசையும் தடம் புரட்டியுள்ளோம் என்று கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில் ‘நான் மனித பிறவி அல்ல, என்னை இந்த உலகத்திற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பி இருக்கின்றார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதனால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்கக்கூடியது’ என்று பேசி இருந்தார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கின்றார்.













