தமிழ் சினிமா திரையுலகில் தற்போது ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘அன்பே டயானா’. இப்படத்தின் வெற்றி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு (Thanks Meet) சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், “அன்பே டயானா திரைப்படம் தனது தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பே ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் மூலம் லாபத்தைத் தந்துள்ளது. அதுமட்டுமின்றி, திரையரங்குகளில் இப்படம் பெற்றுவரும் வரவேற்பு எங்களை மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார். மேலும், குடும்பங்கள் இப்படத்தை வெகுவாகக் கொண்டாடி வருவதாகவும், நேர்மறையான விமர்சனங்களை வழங்கி வருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதே சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பிரபல யூடியூபர் மற்றும் நடிகர் பரிதாபங்கள் கோபி, “கைபேசி திரைகளில் இருந்து பெரிய திரைக்கு வர எங்களுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களின் ஆதரவு இல்லாமல் இன்று சினிமா இல்லை. இது ஒரு சிறிய படமல்ல; இந்தப் படத்தின் போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் இருந்தன, அதற்கு முழுக்காரணம் தயாரிப்பாளர் யுவராஜ் தான். இதில் நான் நடிக்கவில்லை, இயக்குநர் பரி எழில்அழகன் என்ன செய்யச் சொன்னாரோ அதை அப்படியே செய்தேன், அதற்குரிய முழுப் பாராட்டும் அவரையே சாரும்” என்று கூறினார்.
இயக்குநரும் நடிகருமான பரி எழில்அழகன் பேசுகையில், “நாங்கள் திரையரங்குகளுக்குச் சென்றபோது ரசிகர்கள் சிரிப்பதையும், கதாபாத்திரங்களுடன் ஒன்றிணைந்து உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதையும் பார்ப்பது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. குறிப்பாக, படத்தின் கடைசி 20 நிமிடங்கள் ரசிகர்களை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதை நேரில் பார்த்தோம். அந்தத் தருணங்களை நான் எப்போது மறக்க மாட்டேன். அன்பே டயானா படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்தார்.













