தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநருமான அர்ஜுன், தனது இயக்கத்தில் வெளியான ‘ஏழுமலை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் தான் ஹீரோவாக மட்டுமே நடிக்கப்போவதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ‘லியோ’, ‘விடாமுயர்ச்சி’ மற்றும் ‘மங்காத்தா’ போன்ற படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த அவர், தற்போது இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் அர்ஜுன் இயக்கி வரும் ‘சீதா பயணம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் விளம்பர நிகழ்வுகளில் கலந்து கொண்டு அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் சுமார் நான்கு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்திருப்பதாகவும், ஆனால் அது தனது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை எப்போதும் ஒரு வலுவான நாயகனாகவே திரையில் பார்க்க ரசிகர்கள் விரும்புவதாகவும், அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து இனி வில்லன் வேடங்களைத் தவிர்க்கப் போவதாகவும் அர்ஜுன் தெளிவுபடுத்தியுள்ளார்.
2002-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஏழுமலை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட், அவரது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்படத்தின் கதை முழுமையாகத் தயாராகிவிட்டதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சினிமாவில் தோன்றும் போது தனது உடல்வாகைப் பேணுவதில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவதாகவும், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்காகத் தான் தொடர்ந்து கடினமாக உழைக்க விரும்புவதாகவும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் முழுநேர நாயகனாகக் களமிறங்குவது மற்றும் தனது பிளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்க இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.













