ஊரடங்கை மீறி பைக்கில் சுற்றியதால் இளைஞன் ஒருவரின் பைக்கை போலிஸார் பிடுங்க அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை கடந்த சில நாட்களாக போலீசார் கடுமையாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் இடுக்கியில் ஊரடங்குப் பணியில் போலிஸார் ஈடுபட்டு இருந்த போது விஜயகுமார் என்ற 24 வயது இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் அத்தியாவசிய தேவைகளுக்காக வரவில்லை என்பதைப் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீயைப் பற்ற வைத்துள்ளார். இதனைப் பார்த்த மக்கள் தண்ணீர் ஊற்றி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரது உடலில் 75 சதவீதம் தீக்காயம் இருந்ததால் பரிதாபமாக பலியானார்.







