கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதும் குணமானவர்களில் சிலருக்கு மீண்டும் பாதிப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகம் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை சுமார் 8000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 137 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலில் அதிகமாகப் பாதிக்கபப்ட்ட சீனாவில் 5000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். ஆனால் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்தவர்கள் சிலரும் குணமாகியுள்ளனர் என்பது அந்த நாட்டு மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
ஆனால் இப்போது கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் போலவே ஜப்பானிலும் குணமடைந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது மக்கள் மத்தியில் பதற்றத்தை எழுப்பியுள்ளது.







