1980-களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்த பிரபல நடிகை மந்தாகினி (Mandakini), கடந்த காலங்களில் தன்னைச் சுற்றிய சர்ச்சைகள் குறித்துப் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். குறிப்பாக, நிழல்தட உலகத் தாதா தாவூத் இப்ராகிமுடன் (Dawood Ibrahim) தான் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த சினிமா உலகிலும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை மந்தாகினி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் ஒரு விளம்பரப் படப்பிட்டிற்காகத் துபாய்க்குச் சென்றிருந்தேன். அப்போது தற்செயலாக கிரிக்கெட் ஸ்டேடியத்திற்குச் செல்ல நேர்ந்தது. அதேசமயம் அங்கே தாவூத் இப்ராகிமை சந்திக்க நேரிட்டது. ஆனால், அவர் என்னை துபாய்க்கு அழைக்கவுமில்லை; நான் அவரைத் திட்டமிட்டுச் சந்திக்கவுமில்லை. ஒரு நடிகையாக நாம் யாருடன் பேசுகிறோம் என்பது நம் கட்டுப்பாட்டில் இருக்காது; பலரும் வந்து நலம் விசாரிப்பார்கள். அப்படித்தான் அந்தச் சந்திப்பு நடந்தது. ஆனால், அந்த ஒரு புகைப்படம் இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை. அந்தச் சூழலை எப்படி கையாள்வது என்றும் எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தச் சர்ச்சையால் தனது சினிமா வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்றும், 1980-களில் பாலிவுட் சினிமாவுக்கும் அண்டர்வேர்ல்ட் (Underworld) கும்பலுக்கும் இடையே நிதித் தொடர்புகள் இருந்தன என்பது குறித்து தனக்கு எந்தவிதமான அவகாசமோ அல்லது புரிதலோ கிடையாது என்றும் தெளிவுபடுத்தினார். ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான ‘ராம் தேரி கங்கா மைலி’ (Ram Teri Ganga Maili) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மாபெரும் வெற்றி கண்ட மந்தாகினி, தமிழில் ‘சிம்மாசனம்’ மற்றும் ‘பார்கவ ராமுடு’ போன்ற தென்னிந்தியத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.













