தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கிவரும் சீமான் (Seeman) சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிலம்பரசன் (STR) குறித்துப் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தான் இயக்க திட்டமிட்டிருந்த ‘பகலவன்’ (Pakalavan) திரைப்படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது குறித்தும், அப்போது சிம்பு காட்டிய தைரியம் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “நான் நடிகர் சிம்புவை வைத்து ‘பகலவன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், அப்படத்தின் கதை மற்றும் பின்னணியைக் கண்டு பல நடிகர்கள் அதில் நடிக்கப் பயந்தார்கள். எங்கு தனக்குச் சிக்கல் வந்துவிடுமோ என்று அனைவரும் பின்வாங்கினர். ஆனால், நடிகர் சிலம்பரசன் மட்டும் எந்தவித பயமும் இல்லாமல் மிகத் துணிச்சலாக அந்தப் படத்தில் நடிக்க முன்வந்தார். அதுமட்டுமின்றி, அப்படத்தின் தயாரிப்பாளரும் கூட தொடக்கத்தில் தயங்கினார்; இறுதியில் பல்வேறு சூழல்களால் அந்தத் ப்ராஜ்க்ட் கைவிடப்பட்டது” என்றார்.
மேலும் சிம்புவைப் பற்றிப் புகழாரம் சூட்டிய சீமான், “அவர் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட அன்பும் அக்கறையும் உண்டு. சிம்பு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் கலைஞர் (All-rounder artist). எந்தக் கதாபாத்திரத்தையும் உள்வாங்கித் திறம்படச் செய்யும் ஆற்றல் அவருக்கு உண்டு” என்றும் குறிப்பிட்டார். தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் கைவிடப்பட்ட இந்தப் படம் குறித்த சீமானின் இந்தப் பேட்டி தற்போது சினிமா வட்டாரத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.













