தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, அடுத்தடுத்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவரது அடுத்த திரைப்படம் குறித்த ஒரு பிரம்மாண்டமான தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ‘மேட்’ (Mad) என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி தனது புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று திரைத்துறை வட்டாரத்தில் புதிய அப்டடேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வளர்ந்து வரும் இளம் நடிகை மீனாட்சி சௌத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் இசை கூட்டணிதான். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP) மற்றும் கார்த்தி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படத்திற்குப் பிறகு, இந்த மெகா கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎஸ்பி-யின் துள்ளலான இசையும் கார்த்தியின் எனர்ஜியும் திரையில் மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இயக்குநர் கல்யாண் சங்கர் தனது முதல் படத்திலேயே நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பதால், கார்த்தியுடனான இந்தத் திரைப்படமும் ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னராக இருக்கும் எனத் தெரிகிறது. கார்த்தியின் கேரியரில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி மற்றும் டிஎஸ்பி கூட்டணியின் பாடல்களைக் கேட்க ரசிகர்கள் இப்போதே ஆவலாக உள்ளனர். ஒரு பக்கம் எதார்த்தமான கதைகள், மறுபக்கம் மாஸான கமர்ஷியல் படங்கள் என கார்த்தி தனது ரூட்டை மிகச் சரியாகத் திட்டமிட்டுப் பயணிக்கிறார்.













