மும்பை கடற்கரைச் சாலையில் (Mumbai Coastal Road) வாகனங்கள் செல்லும்போது இசையை உருவாக்கும் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’ (Melody Road) தொழில்நுட்பத்தை பிரகன்ப மும்பை மாநகராட்சி (BMC) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பாதையில் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்லும்போது, ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலின் இசை தானாகவே ஒலிக்கும் வகையில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஓட்டுநர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரவும் இந்தத் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பமானது சாலையின் மேற்பரப்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்ட சிறிய பள்ளங்கள் அல்லது ‘க்ரூவ்ஸ்’ (Grooves) மூலம் செயல்படுகிறது. வாகனங்களின் டயர்கள் இந்த வரிசைப்படுத்தப்பட்ட பள்ளங்களின் மீது உரசிச் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் உராய்வு சத்தமானது இசையாக மாற்றப்படுகிறது. மும்பை மாநகராட்சி இந்தத் திட்டத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலைத் தேர்ந்தெடுத்துள்ளது. வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் சீராகச் சென்றால் மட்டுமே இந்த இசையைத் துல்லியமாகக் கேட்க முடியும் என்பதால், இது மறைமுகமாக வாகன வேகத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சர்வதேச அளவில் ஜப்பான், தெற்கு கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இந்த மெலடி ரோடு தொழில்நுட்பம், இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இசைப் பாதையானது ஓட்டுநர்கள் தூக்கத்தில் ஆழ்வதைத் தவிர்க்கவும், சலிப்பு ஏற்படாமல் பயணத்தைத் தொடரவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பை கடற்கரைச் சாலையின் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து நகரின் மற்ற முக்கியப் பகுதிகளிலும் இத்தகைய இசைச் சாலைகளை விரிவுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.













