என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் வந்து என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருக்கின்றார்.
சென்னை அசோக் நகர், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் கூறினால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்று மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: “மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள். தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன். தினமும் அவர்கள் என்னை பார்க்க வருகிறார்கள். அவர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்று சொல்வது தவறான செய்தி. எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் இல்லை.
புதிய கல்விக் கொள்கையை கூட நாங்கள் இதற்காக ஏற்கவில்லை. தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு கிடையாது. ஆனால் அவர்களின் பின்னணியை சோதிக்காமல் என்ன மாதிரி பேசுகிறார் என்பதை தெரிந்து அழைத்து வந்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நல்ல மதிப்பெண்கள் பெறுவது புத்திசாலித்தனம் இல்லை. பகுத்தறிவு உடன் செயல்படுவது தான் புத்திசாலித்தனம். பிறப்போக்கு சிந்தனை உடைய கருத்துக்களை யார் கூறினாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். பகுத்தறிவுவை விதைக்கும் இடம் பள்ளி” என்று அன்பின் மகேஷ் ஆவேசமாக பேசியிருக்கின்றார்.













