மழை நேரங்களிலும், கோடை நேரத்திலும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது, இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. காட்டு யானைகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், வனத்துறையினர் பொது மக்கள் உதவியுடன் அவைகளை மீண்டும் காட்டிற்குள்ளேயே திருப்பி அனுப்புவதும் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் அடிக்கடி காதில் வந்து விழக்கூடிய செய்திகளாக மாறியும் விட்டது.
மலையும், வனப்பகுதிகளிக்கும் அருகாமையில் இருக்கும் குடியிருப்புகளில் சிறுத்தை, கரடி நடமாட்டம் இருந்த செய்தியையும் நாம் கேள்விப்பட்டு விட்டோம். இந்த லிஸ்டில் இப்பொது புதிதாக இணைந்துள்ளது நகருக்குள் வலம் வந்த முதலை ஒன்று. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மகாராஷ்டிராவிலும் கனமழை பெய்தது.

குறிப்பாக ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லன் உள்ளிட்ட சில இடங்களில் மழை தொடர்ச்சியாக பெய்தது. கனமழையை தொடர்ந்து நகரின் முக்கிய சாலையில் ஹாயாக வந்து முதலையை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். கனமழையின் காரணமாக சிவன் நதியில் இருந்து இந்த முதலை வெளியே வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அலட்டாக சாலையில் வலம் வந்த முதலை அவ்வழியே சென்றவர்களை அச்சமடைய வைத்துள்ளது.
சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்க ஒய்யார நடைபோட்டு சாலையை கடந்துள்ளது இந்த முதலை. அந்த வழியே காரில் சென்ற நபர் ஒருவர் சாலையில் வலம் வந்த முதலையை காருக்குள் இருந்த படியே தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். வலை தளங்களில் அப்-லோட் செய்யப்பட்ட இந்த வீடியோ தான் இப்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பர்.













