இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவிலருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
டெல்லியில் வீர சவார்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது
இந்தியாவின் பழங்கால கலாச்சாரமான இந்துத்துவா, சனாதன தர்மா ஆகியவை சுதந்திரமானவை. இந்தக் கலாச்சாரத்தை நாம் தலைமுறைகளாக வளர்த்து வருகிறோம். வழிபாட்டை அடிப்படையாக வைத்து யாரும் இதைப் பிரித்துப் பார்க்கவில்லை. இந்துக்களின், முஸ்லிம்களின் மூதாதையர்கள் ஒன்றுதான். இந்த சிந்தனை மட்டும் சுதந்திரப்போராட்டத்தின்போது அனைவரின் மனதில் இருந்திருந்தால், அப்போதே இந்தியா பிளவுபடுவதைத் தடுத்திருக்கலாம்.
வீர சவர்க்கார் ஒரு தேசியவாதி, தொலைநோக்குடையவர். சவார்க்கரின் இந்துத்துவா என்பது ஒருங்கிணைந்த இந்தியாதான், மதம், சாதி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் யாரையும் பாகுபாடுகாட்டக்கூடாது என்பதுதான் அவருடைய சித்தாந்தம். இதுதான் இந்த தேசத்தின் அடிப்படை.
சவார்க்கர் ஒருமுறை கூறுகையில், இந்தியாவை ஆள வேண்டுமானால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினால்தான் முடியும் என்றுபுரிந்து கொண்டனர். அதனால்தான் அவர்கள் பிரிவினையை ஏற்படுத்த அதிகம் முயன்றனர். அந்தமான் சிறையிலிருந்து சவார்க்கர் வந்தபின் எழுதிய புத்தகத்தில், பல்ேவறு விதமான மதவழிபாடுகள் இருந்தாலும் இந்து தேசியவாதம் ஒன்றுதான் என்று எழுதினார். தேசத்தைப் பிரித்தால்தான் கொள்ளையடிக்க முடியும், ஆள முடியும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.
இந்திய சமூகத்தில் பலரும் இந்துத்துவா, ஒற்றுமை குறித்துப் பலரும் பேசுகிறார்கள். ஆனால், சவார்க்கர் இதை சத்தமிட்டு பேசினார். இப்போது பல ஆண்டுகளுக்குப்பின், அதை உணர்ந்த நாம், நாட்டில் எந்தப் பிரிவினையும் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொருவரும் அவர் கூறிய சத்தமிட்டு கூறுகிறோம்.







