ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள escientic என்கின்ற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்குவதாக மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது: “அச்சுதாபுரம் மருத்துவ நிறுவன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாக மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டேன். அவர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தைரியம் கொடுத்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளேன்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 லட்சமும், சிறுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 25 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும். எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.







