நீட் தேர்வு ரத்து குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதேனும் இருப்பின் அதை மேற்கொள்ளும்படி எடப்பாடி பழனிச்சாமி வழியுறுத்தி இருக்கின்றார்.
அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தஞ்சை மாவட்டம், சிலம்பவேளாளங்காடு பகுதியை சேர்ந்த மாணவர் தனுஷ். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாததால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.
நீட் தேர்வு ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் திமுக முதலமைச்சர் தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெட்டி விளம்பர பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்களின் ரத்தக்கரைகள் தனது கையில் இருப்பதை அவர் உணர வேண்டும். 40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் முதல்வர் ஸ்டாலின் ?
வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் தேர்வு ரகசியம் எப்போது வெளியில் வரும். இன்னும் எத்தனை மாணவர் செல்வங்கள் உயிரிழப்பதை நாங்கள் பார்க்க போகிறோம். நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் விடிய அரசுக்கு கடும் கண்டனம். இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுங்கள் என்று விடியா திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மாணவச் செல்வங்களே உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனை கற்களாக மாற்றி பழகுங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

