தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்திருக்கின்றது.
தமிழகத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதி ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது ‘ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையிலிருந்தும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை கிளம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதன்கிழமை அன்று 225 பேருந்துகளும், வியாழக்கிழமை பத்தாம் தேதி அன்று 850 பேருந்துகளும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் இடங்களுக்கு 9-ம் தேதி புதன்கிழமை அன்று 35 பேருந்துகளும், 10-ம் தேதி வியாழக்கிழமை 265 பேருந்துகளும் இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மற்ற இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கும் தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிக்கும் பொருட்டு தங்களது பயணத்தை www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்து பயணித்துக் கொள்ளலாம். இந்த சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு அனைத்து பேருந்து நிலையங்களிலும் புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













