வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் தான் காக்கா தோப்பு பாலாஜி. இவரை போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் தேடி வந்தார்கள். இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. அடிக்கடி இவர் சிறைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.
இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பிரத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றது.
காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்கள் தேடி வந்தார்கள். அவர் இருக்கும் இடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால் போலீசாருக்கு அவரை கண்டுபிடிப்பது மிகச் சிரமமாக இருந்துள்ளது. கடைசியாக வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே bsnl குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காக்கா தோப்பு பாலாஜியை நெருங்கிய போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கி இருக்கின்றார். இதனால் தனிப்படை போலீசார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் போலீஸ் வாகனம் மீது குண்டு பாய்ந்தது. இதன் காரணமாக போலீசார் காக்கா தோப்பு பாலாஜியை நோக்கி இரண்டு முறை சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து பாலாஜி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த இரண்டாவது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.













