தென்னிந்தியத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி (JD Chakravarthy). ‘சர்வம்’ மற்றும் ‘கச்சேரி ஆரம்பம்’ போன்ற படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் அசத்திய இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாத்துறையில் நடிகைகள் எதிர்கொள்ளும் இருண்ட பக்கங்கள் குறித்துப் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்படி, ஒரு பிரபல நடிகையின் வீட்டில் நடந்த சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார். “நானும், சக நடிகர் ஒருவரும், ஒருமுறை ஒரு பிரபல நடிகையின் வீட்டிற்கு டின்னருக்காகச் சென்றிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மிகவும் செல்வாக்கு மிக்க தயாரிப்பாளர் அங்கு வந்தார். உடனே அந்த நடிகை எங்களைப் படுக்கைக்கு அடியில் ஒளியச் சொன்னார். அங்கிருந்து அந்தத் தயாரிப்பாளர் அந்த நடிகையிடம் எவ்வளவு கேவலமாகவும், அநாகரீகமாகவும் பேசினார் என்பதைக் கேட்டு நாங்கள் அதிர்ந்து போனோம்” என்றார்.
“அவர் போன பிறகு அந்த நடிகை அழுவார் என்று நினைத்தேன்.. ஆனால் அவர் சிரித்தார்” – என ஜேடி சக்ரவர்த்தி மிகுந்த வேதனையுடன் கூறினார்.

அந்தத் தயாரிப்பாளர் சென்ற பிறகு, படுக்கைக்கு அடியிலிருந்து வெளியே வந்த ஜேடி மற்றும் சக நடிகர் இருவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஆனால், அந்த நடிகை சாதாரணமாகச் சிரித்துக்கொண்டே, “இவர் ஒரு முதியவர்.. இவர் இப்படிதான், கேவலமாக பேசுவார். ஆனால் என்ன செய்வது? எனக்கு வாய்ப்புகள் தேவை. இவ்வளவு பெரிய தயாரிப்பாளரை என்னால் எதிர்க்க முடியாது. இதெல்லாம் எனக்குப் பழகிவிட்டது” என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்த ஜேடி சக்ரவர்த்தி, ஏன் பல முன்னணி ஹீரோக்கள் தங்கள் மகள்களைச் சினிமாவிற்குள் அனுப்பத் தயங்குகிறார்கள் என்பதற்கான காரணத்தையும், இதனுடன் ஒப்பிட்டுப் பேசினார். திறமை இருந்தும் அதிகார பலத்திற்கு அடிபணிந்து போக வேண்டிய கட்டாயத்தில் பல நடிகைகள் இருப்பதாகவும், வெளியுலகிற்குத் தெரியாத பல ரகசியங்கள் சினிமா கேமராவுக்குப் பின்னால் மறைந்து கிடப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். ஜேடி சக்ரவர்த்தியின் இந்த துணிச்சலான பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.













