உத்திரபிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில் சட்டசபைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வெளியேற முடியாமல் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்று வழியில் வெளியேறி இருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பெய்த கனமழையால் சாலை எங்கிலும் தண்ணீர் தேங்கியது.
கனமழையால் அம்மாநில சட்டசபைக்குள் தண்ணீர் தேங்கியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தண்ணீர் தேங்கியதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபை வளாகத்தில் இருந்து மாற்று வழியாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் சட்டசபை அதிகாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தனர்.
சட்டசபை செயலக அலுவலகத்திலும் மழை நீர் புகுந்ததாக தகவல் வெளியானது. உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபையில் இதற்கு முன்பு அந்த அளவு தண்ணீர் தேங்கியதை தான் பார்த்ததே இல்லை என்று அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் டெல்லியில் பெய்து வரும் கனமழையால் நேற்று பாராளுமன்ற வளாகத்திலும் மழை நீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.







