தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில படங்கள் மட்டுமே போரின் கோரத்தையும், அதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்களின் வலியையும் மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்கின்றன. அந்த வகையில், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றத் திரைப்படம் ‘நீளிரா’ (Neelira). பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகிவிட்டது.
இயக்குநர் சோமீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் மே 8, 2026 அன்று ஜீ5 (ZEE5) தளத்தில் பிரத்யேகமாகப் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. 1988-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை இந்தப் படம் விவரிக்கிறது. ஒரு திருமண வீட்டிற்குள் நுழையும் ராணுவ வீரர்களுக்கும், அந்த வீட்டில் இருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே நடக்கும் உளவியல் போராட்டமே இதன் மையக்கரு.
View this post on Instagram
நவீன் சந்திரா இதில் ஒரு ராணுவ கேப்டனாக மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடன் சனந்த், கபில வேணு, ரூபா கொடுவயூர் என அனைவரும் யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். குறிப்பாக, ஈழத் தமிழ் பேச்சுவழக்கும், அந்த நிலப்பரப்பின் ஈரப்பதமும், அச்சமும் திரையில் அப்படியே கொண்டுவரப்பட்டுள்ளது. ‘மௌன ராகம்’ படத்தைப் பார்க்கத் துடிக்கும் பெண்கள், ஒரு பக்கம் போர் என எதார்த்தமான காட்சிகள் இந்தப் படத்தில் அதிகம்.
ஏற்கனவே தியேட்டர்களில் இந்தப் படத்தைப் பார்க்கத் தவறியவர்களுக்கு, மே 8 ஒரு பொன்னான வாய்ப்பு. இசையமைப்பாளர் ‘K’ அவர்களின் பின்னணி இசை படத்திற்கு ஒரு பதற்றமான சூழலைத் தந்துள்ள நிலையில், தியேட்டர்களில் பார்த்த பலரும் இந்தப் படத்தை “இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று” எனப் புகழ்ந்துள்ளனர். போர் என்பது வெறும் துப்பாக்கிச் சத்தங்கள் மட்டுமல்ல, அது மனித மனங்களில் ஏற்படுத்தும் ஆறாத வடுக்கள் என்பதை ‘நீளிரா’ மிகவும் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.













