கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகியது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலச்சரிவில் இன்னும் பலரை காணவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருந்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கி கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையிலிருந்து வங்கிகள் இஎம்ஐ பிடித்தம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. வங்கிகள் இஎம்ஐ பிடித்தம் செய்ததற்கு மாநில அளவிலான வங்கிகள் கூட்டம் அமைப்பின் கூட்டத்தில் முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். அதில் பேசிய அவர் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வது தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.







