கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் தற்போது ஒரு ஹாட் நியூஸ் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ‘எக்ஸ்டெண்டட் கேமியோ’ ரோலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ரஜினியை நேரடியாகப் போனில் அழைத்துத் தனது சூழலை விளக்கி படத்திலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கான் விலகியதற்குக் காரணம் அவரது அடுத்த படமான ‘கிங்’ (King). இந்தப் படத்தில் ஷாருக்கான் ஒரு தனித்துவமான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் நடித்து வருகிறாராம். ‘ஜெயிலர் 2’ ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்புள்ள நிலையில், அதற்கு முன்பே தனது லுக் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக அவர் நேரடியாக ரஜினிகாந்தைத் தொடர்பு கொண்டு தனது சூழ்நிலையை விளக்கியுள்ளாராம்.
ஷாருக்கான் வெளியேறிய அந்த இடத்தைப் பிடிக்க தற்போது பவர் ஸ்டார் பவன் கல்யாண் களம் இறங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பிரபல சினிமா ஊடகமான ‘வளைப்பேச்சு’ பகிர்ந்துள்ள தகவலின்படி, ஷாருக்கான் செய்ய வேண்டிய அந்த மாஸான ரோலில் தற்போது பவன் கல்யாண் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பும் ரகசியமாக நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ரஜினி மற்றும் பவன் கல்யாண் ஆகிய இரு மாஸ் ஹீரோக்களும் ஒரே திரையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் கேமியோ காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்த்தன. அதே ஃபார்முலாவை இரண்டாம் பாகத்திலும் தொடர இயக்குநர் நெல்சன் திட்டமிட்டுள்ளார். ஷாருக்கான் மிஸ் ஆனாலும், பவன் கல்யாணின் வருகை ஆந்திரா மற்றும் தெலுங்கானா பாக்ஸ் ஆபீஸில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு மிகப்பெரிய வசூல் வேட்டையைத் தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியுடன் நடிக்க எப்போதுமே ஆர்வமாக இருக்கும் ஷாருக்கான், எதிர்காலத்தில் நிச்சயம் இணைவோம் என சூப்பர் ஸ்டாரிடம் உறுதி அளித்துள்ளாராம்.
தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் இந்தப் புதிய மாஸ் அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனத் தெரிகிறது. ரஜினி – பவன் கல்யாண் கூட்டணி இணையப்போகும் செய்திதான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் டாபிக்!













