சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வரும் ஒரு புதிய வீடியோவில், சாதாரண இஸ்திரி மற்றும் ட்ரை கிளீனிங் தொழில் செய்பவர் ஒருவர் மாதம் 2.3 லட்சம் ரூபாய் வரை ஈட்டுவது குறித்த லாபக் கணக்கு விவரிக்கப்பட்டுள்ளது. ட்ரை கிளீனிங் தொழில் வருமானம் மற்றும் அதன் தினசரி உழைப்பு எவ்வாறு ஒரு ஐடி பணியாளரின் ஊதியத்தை விட அதிகமாக உள்ளது என்பதைப் பொருளாதார ரீதியாக இந்தப் பதிவு விளக்குவதால் இது பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
நளினி உங்கர் என்ற உள்ளடக்க உருவாக்குநர், தனது வீட்டின் அருகே தொழில் செய்யும் ஒரு நபரின் வருமான விவரங்களைச் சேகரித்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த நபர் ஒரு நாளைக்குச் சுமார் 350 ஆடைகளை இஸ்திரி செய்கிறார். ஒரு ஆடைக்கு 10 ரூபாய் வீதம் இஸ்திரி செய்வதன் மூலம் மட்டும் ஒரு நாளைக்கு 3,500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இது தவிர, பட்டுப் புடவைகள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளை ட்ரை கிளீனிங் செய்வதற்கு ஒரு ஆடைக்கு 350 ரூபாய் வசூலிக்கிறார். நாளொன்றுக்குச் சராசரியாக 20 ஆடைகளை ட்ரை கிளீனிங் செய்வதன் மூலம் மேலும் 3,500 ரூபாய் என மொத்தம் ஒரு நாளைக்கு 7,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
Yesterday, I was talking with the dry cleaning shop owner near my house, where I regularly go. He and his wife both work together, and they have two helpers on salary. I was shocked when they said they earn around ₹2,00,000 per month, which is equal to a 10+ years experienced… pic.twitter.com/BjPddpb9Me
— Nalini Unagar (@NalinisKitchen) February 9, 2026
மாதத்தில் 27 நாட்கள் வேலை செய்வதாகக் கணக்கிட்டால், ஒரு மாதத்தின் மொத்த வருவாய் சுமார் 2.8 லட்சம் ரூபாயாக உள்ளது. இதில் அந்த நபருக்குச் சொந்தமான கடை என்பதால் வாடகைச் செலவு இல்லை. மின்சாரக் கட்டணம் மாதம் 6,000 ரூபாய் என்றும், அவருக்கு உதவியாக இருக்கும் இரண்டு பணியாளர்களுக்குச் தலா 20,000 ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதர பராமரிப்புச் செலவுகளையும் சேர்த்துக் கழித்த பிறகு, அந்த நபருக்கு நிகர லாபமாக மாதம் 2 லட்சம் முதல் 2.3 லட்சம் ரூபாய் வரை கிடைப்பதாக நளினி அந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பணம் ஈட்டுவது என்பது பெரிய பட்டங்களைப் பொறுத்தது அல்ல, மாறாக உழைப்பு மற்றும் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் திறனைப் பொறுத்தது என்று பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் குறிப்பாகப் பெரிய நகரங்களில் இத்தகைய சிறிய அளவிலான சேவைத் தொழில்கள் எவ்வளவு பெரிய பொருளாதார வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகப் பொருளாதார ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.













