கேரளாவில் மருத்துவர் பரிந்துரையோடு விண்ணப்பம் செய்வர்களுக்கு வீடு தேடி மது வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00 ,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 7 நாட்களாக மது கிடைக்காத மன உளைச்சலில் கேரளாவில் மது கிடைக்காததால் 7 பேர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதே போல தமிழகத்திலும் 5 பேர் வரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து கேரள முதல்வர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் தடைபோட்டுள்ளது. அதுபோல கேரள மருத்துவர்களிடம் யாருக்கும் மதுவை பரிந்துரைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதற்குப் பலமாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசின் இந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் கேரளாவில் உள்ள மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.







