தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகள் மூலம் முத்திரைப் பதித்த இயக்குநர் சேரன் (Director Cheran), பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் (Dr. S. Ramadoss) வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அய்யா’ (Ayya) என்ற பெயரில் புதிய பயோபிக் படத்தை இயக்கவிருந்தார். இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், இப்படம் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளதாக இயக்குநர் சேரன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சேரன், இத்திரைப்படத்தின் பின்னணி குறித்து மனம் திறந்தார். இப்படத்தின் கதையை முதலில் உருவாக்கியவர் சங்ககிரி ராஜ்குமார் என்றும், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாகத் தயாரிப்பாளர்கள் தன்னை இப்படத்தை இயக்க வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். சங்ககிரி ராஜ்குமாரின் உழைப்பை மதித்து அவருடன் இணைந்து, 1980-களில் நடந்த சம்பவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லொகேஷன் தேடும் பணிகள் என கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் தங்களின் முழுமையான உழைப்பை இதற்காகச் செலவிட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், குடும்பத்திற்குள் ஏற்பட்ட அப்பா – மகன் மோதல் (Father-son conflict) காரணமாகத் திட்டம் அப்படியே முடங்கியதாகச் சேரன் வேதனையுடன் தெரிவித்தார். தற்போது அந்தக் குடும்பம் மீண்டும் இணைந்துவிட்டாலும், தற்போதைய சூழ்நிலைகள் மாறிவிட்டதாகவும், இனி இப்படத்தை முன்னெடுத்துச் செல்ல யாருமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.













