தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் கவன ஈர்த்துவரும் இளம் நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram), மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ படத்தில் நடித்து முடித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் கமிட் ஆன ஒரு தெலுங்குத் திரைப்படம் தொடர்பான விவகாரம் கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்த இத்திரைப்படத்திற்காக, தயாரிப்பு தரப்பில் செட் அமைப்பது, சண்டைக்காட்சிப் பயிற்சி மற்றும் இசையமைப்பு உள்ளிட்ட பல்வேறு, முன் தயாரிப்புப் பணிகளுக்காகக் கணிசமான தொகை செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், படத்திற்கான சரியான தேதிகளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் கால்ஷீட் சிக்கல் காரணமாகப் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால் அதிருப்தியடைந்த தயாரிப்பாளர்கள், தரப்பில் இருந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கிய நிலையில், நடிகர் விக்ரம் (Chiyaan Vikram) உடனடியாகத் தலையிட்டுத் தயாரிப்பாளர்கள் மற்றும் தனது மகன் துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. இந்தச் சுமூகத் தீர்வு முயற்சியின் மூலம், தயாரிப்பாளர்கள் மற்றும் துருவ் இடையேயான பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, தடைபட்டிருந்த இத்திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













