நாமக்கலில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பலானது இந்தியா முழுவதும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்து விட்டு நாமக்கல் வழியாக கண்டைனர் மூலம் தப்பி ஓடிக்கொண்டிருந்த நபர்களை போலீசார் பிடித்தனர். இவர்கள் அனைவரும் கண்டெய்னர் லாரிகளில் சென்று கூகுள் மேப் மூலம் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களை கண்காணித்து அதை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள்.
நாமக்கலில் பிடிபட்ட ஐந்து பேரிடம் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போலீஸார்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது மகாராஷ்டிராவில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொள்ளை அடிக்க முயன்ற போது இவர்கள் போலீசில் சிக்கியது தெரிய வந்தது. அப்போது அவர்களின் பெயர் முகவரிகளை மாற்றி கூறியிருக்கிறார்கள்,
ஆனால் அவர்களின் புகைப்படம் கைரேகை பதிவாகி இருந்தது. இவர்கள் கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணத்தை யாரிடம் கொடுக்கிறார்கள். சொத்துக்கள் வாங்கி உள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது.
மேலும் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த கொள்ளை கும்பலில் 70 பேர் கொண்ட கும்பல் இருக்கும் என தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் இந்த கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.













