தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர் கழிவுநீர் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு முறைகேடு ஆகியவற்றை கண்டித்து தமிழக முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் இன்று காலை 10:30 மணியளவில் அதிமுக மாவட்ட பொதுச்செயலாளர் நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ராயபுரம், எம்சி ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மகளிர் அணியினர் கட்சி நிர்வாகிகள் பலரும் கைகோர்த்து கலந்து கொண்டனர்.
இது மட்டும் இல்லாமல் வில்லிவாக்கம், கொளத்தூர், அண்ணா நகர், தண்டையார்பேட்டை, சென்னை வால் டாக்ஸ் ரோடு, வேளச்சேரி, அசோக் நகர், மதுரவாயில், அம்பத்தூர், தென் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.













