தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அனில் ரவிபுடி, நடிகர் தளபதி விஜய்யைச் சந்தித்த மறக்க முடியாத தருணம் குறித்து மனம் திறந்துள்ளார். நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். இப்படத்தைப் பார்த்த நடிகர் விஜய், ஹைதராபாத்தில் ‘தி கோட்’ (The GOAT) படப்பிடிப்பில் இருந்தபோது அனில் ரவிபுடியை நேரில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தத் திடீர் அழைப்பு குறித்து அனில் ரவிபுடி கூறுகையில், “விஜய் சார் என்னை நேரில் அழைக்கவும் ஆச்சரியப்பட்டு உடனடியாக அங்கே ஓடினேன். அவரது காரவானில் அவருடன் 15 நிமிடங்கள் செலவழித்தேன். ‘பகவந்த் கேசரி பார்த்தேன், ரொம்ப பிடித்திருந்தது. மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். சில எபிசோடுகள் இன்னும் என்னை haunt செய்கிறது. அதனால்தான் உங்களைப் பாராட்டுவதற்காக அழைத்தேன்’ என்று விஜய் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார். அந்தச் சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும், உடனடியாக மகேஷ் பாபுவை அழைத்து இதைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் தற்போது வைரலாகி வரும் இந்தத் தகவல், சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் சக இயக்குநர்களின் பணிகளை வெளிப்படையாகப் பாராட்டி ஊக்கப்படுத்துவது திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.













