இந்திய இதிகாசமான ராமாயணம் மீண்டும் ஒருமுறை திரையில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்த முறை ‘வால்மீகி ராமாயணம்’ (Valmiki Ramayana) என்ற பெயரில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு, இந்தியத் திரையலகின் இசை மேதை இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைக்கிறார்.
பிரபல இந்திய நாவலாசிரியர் ஆனந்த் நீலகண்டனின் (Anand Neelakantan) திரைக்கதையைத் தழுவி, இயக்குனர் பாவ்னா தத்தா தல்வார் (Bhavna Talwar) இந்தப் படத்தை இயக்குகிறார். ஆனந்த் நீலகண்டனின் ‘வால்மீகி ராமாயணம்’ என்று வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, இசை மற்றும் புராணக்கதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“நடிகர்கள் விவரம் ரகசியம்” – இது ஒரு அனிமேஷன் திரைப்படமா? என்ற கேள்விக்கு இதுவரை, இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த எந்தத் தகவலையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இதனால், இது ஒரு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அனிமேஷன் திரைப்படமாக இருக்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இளையராஜாவின் ஆன்மீக ரீதியான இசை, வால்மீகியின் ராமாயணத்திற்கு ஒரு புதிய உயிரோட்டத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசைஞானியின் இந்தப் புதிய புராஜெக்ட் கோலிவுட்டில் தனித்துவமான கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் 2026 அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் நீலகண்டனின் எழுத்தில் வழக்கமாக இருக்கும் அந்தச் சுவாரஸ்யமான கோணங்கள் இந்தப் படத்திலும் இருக்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.













