நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளுக்கே வராத நிலையில், அந்தப் படம் இணையதளங்களில் கசிந்தது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே, ஒரு படி மேலே போய் கோயம்புத்தூரில் உள்ள ஒரு உள்ளூர் கேபிள் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் ‘ராசி பிரைம் மூவி’ (Rasi Prime Movie) என்ற உள்ளூர் கேபிள் சேனலில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு ‘ஜனநாயகன்’ படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, இடைவேளைக்கு பிந்தைய சுமார் 21 நிமிட காட்சிகள் இந்த சேனலில் ஒளிபரப்பானதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கேபிள் டிவியில் படம் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தவறிழைத்த கேபிள் டிவி உரிமையாளர் எஸ். பழனிசாமி (44) என்பவரை கருமத்தம்பட்டி போலீசார் நேற்று (ஏப்ரல் 13) கைது செய்தனர். அவரிடமிருந்த ஒரு தனிநபர் கணினி மற்றும் நான்கு ஹார்டு டிஸ்க்குகள் (Hard Disks) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறையான அனுமதி இல்லாமலும், தணிக்கை செய்யப்படாத ஒரு திரைப்படத்தை ஒளிபரப்பியதாலும், அந்த சேனலின் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் தமிழக சைபர் க்ரைம் போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கேபிள் டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது மற்ற ஆப்பரேட்டர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
‘ஜனநாயகன்’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இது போன்ற திருட்டுத்தனமான ஒளிபரப்புகள் படத்தின் வசூலை பாதிக்கும் எனத் தயாரிப்பு தரப்பு கவலை தெரிவித்துள்ளது. அதே சமயம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் பகுதியில் நடந்த இந்த அதிரடி கைது நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
திரைப்படங்களை சட்டவிரோதமாக ஒளிபரப்புவது மற்றும் இணையத்தில் பதிவேற்றுவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.













