தமிழ் சினிமாவில் இப்போது யூத்கள் மத்தியில் செம ஹைப் ஏற்றியிருக்கும் கூட்டணி எதுவென்றால் அது ‘ராவடி’ படக் கூட்டணிதான். மலையாளத்தில் இயக்குநராகவும் நடிகராகவும் கலக்கி வரும் பேசில் ஜோசப் முதன்முறையாகத் தமிழில் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. 2025-ல் வெளியான ‘சிறை’ படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று, கோலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷனாக மாறியிருக்கும் எல்கே அக்ஷய் குமாரும் இந்தப் படத்தில் மற்றொரு நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஒரு பக்கா காலேஜ் காமெடி எண்டர்டெய்னராகத் தயாராகியுள்ளது. சென்னை மற்றும் ஒகேனக்கல் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசில் ஜோசப் மற்றும் எல்கே அக்ஷய் குமார் இருவரும் சேர்ந்து செய்த அலப்பறைகள் இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. குறிப்பாக ஜாபர் சாதிக், நோபிள் கே ஜேம்ஸ் ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் அடித்த லூட்டிகள் படக்குழுவினரையே திக்குமுக்காட வைத்துள்ளதாம்.
பேசில் ஜோசப் இந்தப் படத்தில் ‘அப்பாஸ்’ என்கிற கதாபாத்திரத்திலும், எல்கே அக்ஷய் குமார் ‘பிரபு’ என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரு காலேஜ் ஹாஸ்டலில் நடக்கும் கலாட்டாக்கள், சீனியர்-ஜூனியர் மோதல் எனப் படம் முழுக்க சிரிப்பு வெடிக்கு கேரண்டி என்கிறது படக்குழு. ஏற்கனவே வெளியான டீசரில் ஜாபர் சாதிக் பாம் தயாரிக்கப் போவதாகச் சொல்லும் காமெடிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இப்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
View this post on Instagram
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு 2026 மே மாதத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு முடிந்த கையோடு படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களும் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
முக்கியமாக எல்கே அக்ஷய் குமார் மற்றும் பேசில் ஜோசப் இடையிலான அந்த கெமிஸ்ட்ரி திரையில் ஒரு புதுமையான மேஜிக்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சிறை’ படத்திற்குப் பிறகு அக்ஷய் குமார் நடிக்கும் படம் என்பதால் பிசினஸ் ரீதியாகவும் இந்தப் படத்திற்குப் பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. பேசில் ஜோசப்பின் அந்த எதார்த்தமான டைமிங் காமெடி மற்றும் அக்ஷய்யின் அந்த மாஸ் லுக் என இரண்டும் சேர்ந்து ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்தாக அமையப்போவது உறுதி.













