நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை தொடர்பாக நிலவி வந்த சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ஜன நாயகன் தணிக்கை குறித்த வழக்கை வாபஸ் பெறவும் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், திரைப்படத்தை தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவிடம் ஒப்படைக்க தயாரிப்பாளர்கள் தற்போது சம்மதம் தெரிவித்துள்ளனர்.
திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கக் காலதாமதம் செய்ததைக் கண்டித்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், தணிக்கை வாரியம் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததுடன், படத்தின் சில காட்சிகள் ராணுவ அமைப்பு மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி தடையைப் பெற்றது. இந்தத் தொடர் சட்டச் சிக்கல்கள் காரணமாக ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய படம் காலவரையறையின்றித் தள்ளிப்போனது.
தற்போது இந்த வழக்கை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனு நாளை பிப்ரவரி 10-ம் தேதி நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன், ஒன்பது பேர் கொண்ட தணிக்கை வாரிய மறுஆய்வுக் குழு படத்தை மீண்டும் பார்வையிட்டு சான்றிதழ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் கடைசிப் படம் என்பதால், இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.













