திருச்சி மாநகரின் சந்திரம் பேருந்து நிலையத்திற்கருகில் தமிழகம் முழுவதும் செயல்படும் லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் கிளை உள்ளது. இந்த கிளையில் கடந்த 2019 அக்டோபரில் பின்புறம் துளையிட்டு கோடிக்கணக்கான நகைகள் களவாடப்பட்டன. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுவரை எத்தனையோ திருட்டுக்கள் நடந்திருந்தாலும் சினிமாவில் வருவது போல பின்புறம் பெரிய துளையிட்டு திருடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் குற்றவாளியை பிடிப்பது போலிசுக்கு சவாலாக இருந்தாலும் , இது போல செயல்களை இவன் தான் செய்ய முடியும் என திருவாரூரை சேர்ந்த முருகன் என்ற கொள்ளையனை தேடி வந்தனர்.
ஒரு கட்டத்தில் திருவாரூரில் வாகனசோதனையின்போது முருகன் கூட்டாளிகள் போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டனர்.முருகனும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான். திருச்சி அழைத்து வரப்பட்ட முருகன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலம் கழிக்கும் இடத்தில் நகைகளை குழி தோண்டி புதைத்து வைத்திருந்தான் நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன.
கொள்ளையடித்த பணத்தில் செய்யக்கூடாத பல தவறுகளை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த முருகன் ஹெச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்டான்.
முருகன் மீது கர்நாடகாவில் – 72 வழக்குகள், தமிழகத்தில் – 17 வழக்குகள், ஆந்திராவில் – 4 வழக்குகள் என பதிவானவை மட்டும், 93 வழக்குகள். இதில் பல வழக்குகளில் முருகன் தண்டனை பெற்றுள்ளார்.
அக்கா மகன் சுரேஷுன் இணைந்து சினிமா எடுக்க முயற்சித்த முருகனுக்கு நடிகைகள் தொடர்பு, போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு என்றும் தகவல்கள் வெளியாகின. முருகனிடமிருந்து போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விபரமும் வெளியானது. இது குறித்தும் போலீசார் ஒருபக்கம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி வழக்குககளில் முருகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் கிடைத்தது. ஆனாலும் பிற வழக்குகளால் விடுதலை ஆக முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், முருகன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவாக இருந்தார். பெங்களூரு சிறையில் இருந்த அவர் உடல்நலம் மிகவும் மோசமானதால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்தார்.













