தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமான 51 பேருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 81,000 ஐ தாண்டியுள்ளது. சீனாவின் வூஹான் மாநிலத்தில் முதன் முதலாக பரவிய வைரஸ் இன்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது.
கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. அங்கு இதுவரை 10384 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6000 பேர் சிகிச்சையில் குணமடைந்தும் 200 பேர் பலியாகியும் உள்ளனர். அங்குள்ள டாயிகு மாகாணத்தில் சிகிச்சையில் குணமாகியதாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட 51 பேருக்கு மீண்டும் கொரோனா இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியளித்துள்ளது.
இதுபற்றி இருவிதமான கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. முதலில் இது சோதனைகளில் நடந்த தவறாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தரப்போ மனித உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களில் எங்காவது கொரோனா ஒட்டியிருந்து மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்புகின்றனர்.







