திரை உலகில் பல தசாப்தங்களாக ‘சூப்பர் ஸ்டார்’ (Superstar) என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அவரது ஸ்டைல் மற்றும் நடிப்புக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது ஒருபுறம் என்றால், அவரது எளிமைக்கு அடிமையானவர்கள் மறுபுறம். ரஜினிகாந்தை வைத்து ‘அந்தா காணூன்’ (Andhaa Kaanoon) உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த மூத்த தயாரிப்பாளர் ஏ. பூர்ணச்சந்திர ராவ் (A. Purnachandra Rao), சமீபத்தில் ரஜினி குறித்த சில மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
“நான் என்ன தீண்டத்தகாதவனா?” – நெஞ்சை உருக்கிய சம்பவம்
ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. ரஜினிகாந்துக்காக அவரது மேக்கப் ரூமில் உணவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பிற நடிகர்கள் அனைவரும் வெளியே ஒரு சிறிய கீற்றுக் கொட்டகையின் கீழ் அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
திடீரென தனது உணவை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்த ரஜினி, பூர்ணச்சந்திர ராவிடம் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். “பூர்ணச்சந்திர ராவ் காரு, நான் என்ன தீண்டத்தகாதவனா? (Am I an untouchable?) நீங்கள் அனைவரும் இங்கு ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாகப் பேசிக்கொண்டு சாப்பிடும்போது, என்னை மட்டும் ஏன் நான்கு சுவர்களுக்குள் தனியாக இருக்கச் சொல்கிறீர்கள்? எனக்கும் இங்கே இடம் இல்லையா?” என்று கேட்டு அங்கேயே அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். “அந்தக் கேள்வி இன்றும் என் இதயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது” என்கிறார் தயாரிப்பாளர்.
ஒரு சட்டை.. இரண்டு நாடுகள்!
1983-ல் ‘அந்தா காணூன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு, கொல்கத்தா விநியோகஸ்தர்கள் ரஜினியை அங்கு அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்தனர். கொல்கத்தா மற்றும் நேபாளத்திற்குச் செல்லத் திட்டமிடப்பட்டது. விமான நிலையம் சென்ற பிறகுதான் ரஜினி சொன்னார், “பூர்ணச்சந்திர ராவ் காரு, என்னிடம் ஒரே ஒரு சட்டை, ஒரு பேண்ட் தான் இருக்கிறது” என்று!
புதிய ஆடைகள் வாங்கலாம் என்று தயாரிப்பாளர் சொன்னபோது, “பேண்ட் தான் இருக்கிறதே, வீணாக ஏன் பணம் செலவு செய்ய வேண்டும்? ஒரு சட்டையை மட்டும் வாங்கிக் கொள்வோம்” என்று கூறி, அந்த ஒரு சட்டையை வைத்துக் கொண்டே கொல்கத்தா மற்றும் நேபாளப் பயணத்தை முடித்துத் திரும்பியுள்ளார் ரஜினி. “இதைப் பிறர் தவறாக நினைக்க வேண்டாம், அவரது சிக்கனத்தையும் எளிமையையும் சொல்லவே இதைப் பகிர்கிறேன்” என்று தயாரிப்பாளர் நெகிழ்ந்தார்.
தயாரிப்பாளரைத் தேடி வரும் ‘தலைவர்’
பொதுவாக ஒரு நடிகரைச் சந்திக்கத் தயாரிப்பாளர்கள் தான் செல்வார்கள். ஆனால் ரஜினிகாந்தோ, “ஏன் நீங்கள் என்னைப் பார்க்க வர வேண்டும்? நானே உங்களைப் பார்க்க வருகிறேன்” என்று கூறி தயாரிப்பாளர் இருக்கும் இடத்திற்கே செல்வாராம். சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக ரஜினியை வரவேற்க விமான நிலையம் செல்வதாகப் பூர்ணச்சந்திர ராவ் சொன்னபோது, “நீங்கள் விமான நிலையம் வந்தால், நான் அங்கிருந்தே திரும்பிச் சென்று விடுவேன்” என்று கூறி, ஒரு தயாரிப்பாளருக்குத் தர வேண்டிய மரியாதையைச் சரியாகக் கொடுத்துள்ளார் ரஜினி.













